ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமுலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் இடம்பெற்ற போதே மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ப.சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “ப.சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டிக்க அமுலாக்கத்துறை விரும்புகிறது. அவரின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கமாகும். அமுலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
இதையடுத்து, அமுலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை எனவும் தேவைப்படும்போது அமுலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார், அமுலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்ததுடன் அமுலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.