வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ திமுக, காங்கிரஸ் பல ஆண்டு காலமாக கூட்டணியாக உள்ளது. தற்போது தமிழக அரசியலில் பல முறைகேடுகள் நுழைந்துவிட்டது. வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை, எதற்காக ஆதரிக்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இருக்கும் வரை பா.ஜ.க, முளைக்கவே முடியாது, முளைக்கவும் விடமாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன், விவசாயக்கடன், மகளிர் கடன்கள் என பா.ஜ.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட வங்கி கடன்கள் மீண்டும் வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சில மாநில சட்டசபையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றுமாறு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால், முதல்வர் பழனிசாமி, வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை எனவும், நன்மை தான் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே பா.சிதம்பரம் மேற்படி கூறியுள்ளார்.