Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பெரும்பான்மையை இழந்தது புதுச்சேரி காங்கிரஸ் | முதல் அமைச்சர் நாராயணசாமி இராஜினாமா

பெரும்பான்மையை இழந்தது புதுச்சேரி காங்கிரஸ் | முதல் அமைச்சர் நாராயணசாமி இராஜினாமா

2 minutes read

இந்தியாவின், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை  இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

நான்காண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் தனவேல், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் தீப்பாய்ந்தான், ஜோன் குமார், திமுகவை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். 

ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்தது என்று எதிர்க்கட்சியினர் துணைநிலை ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இநனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் 22ஆம் திகதியன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். 

பரபரப்பான சூழ்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணியளவில் தொடங்கியது. முதல்வர் நாராயணசாமி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அவரது உரையில்,’ எதிர்க்கட்சிகள் தங்களது வேலையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது புதிய அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்’ என நீண்ட நேரம் உரை நிகழ்த்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கூக்குரலிட்டனர். 

இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து பதவியை இராஜினாமா செய்த முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து இராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

அதன்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘புதுச்சேரி அமைச்சரவையை இராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள். 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குத்தான் வாக்களிக்க உரிமை உண்டு. நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இந்த படுபாதக செயலை செய்த என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என்றார்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து சித்து விளையாட்டுகள் விளையாடி ஆட்சிக்கு அரங்கேற்றி வரும் பாஜக மீது ஏனைய அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறது. 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் அதன் உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்தபோது அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சிகள், திமுகவை சேர்ந்த வெங்கடேசன் என்ற உறுப்பினர் இராஜினாமா செய்தபோது உண்மையில் பாஜகவின் அரசியல் விளையாட்டை இரசிக்கவே செய்தனர்.

விரைவில் தமிழகத்திலும் இத்தகைய நிகழ்வு நடைபெறலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More