“ஐக்கிய மக்கள் சக்தி என்பது இந்நாட்டின் மாற்று அரசு ஆகும். தற்போது அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“அரசின் அனுமதியின்றி அல்லது பொலிஸாரின் அனுமதியின்றி பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்த முடியாது என்ற கருத்தை முற்றாக மாற்றியமைக்க ‘நவம்பர் 02’ கொழும்பு போராட்டத்தின் மூலம் முடிந்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 39 ஆவது பாடசாலை பஸ் நேற்று (03)கல்கமுவ யூ.பி.வன்னிநாயக்க தேசிய பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதன்போது அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“போராட்டம் சட்டவிரோதமானது என எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பொலிஸார் தனிப்பட்ட முறையில் அறிவித்தனர். இந்த அறிவித்தலை நான் உள்ளிட்ட எவரும் பொருட்டாக கொள்ளவில்லை.
ஜனநாயக ரீதியாக சுயமாகச் செல்வதற்கும், போராட்டத்துக்குச் செல்வதற்கும், போராட்டம் நடத்துவதற்குமுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடிந்தமை நவம்பர் 02 ஆம் திகதி அடைந்த மாபெரும் வெற்றியாகும்” – என்றார்.