Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறிதரனுக்கு அறிக்கை மூலம் பதில் வழங்கிய சர்வேஸ்வரன்

சிறிதரனுக்கு அறிக்கை மூலம் பதில் வழங்கிய சர்வேஸ்வரன்

3 minutes read

“முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா? நபர் சார்ந்து எடுப்பதா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செவ்வி ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவுகளை எடுக்கின்றார் என்றும், இனிவரும் காலங்களில் சுமந்திரனின் முடிவை ஏற்கமாட்டோம் என்றும், அவரது முடிவுகளுக்கு எதிராகவே செயற்படவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னர் அவ்வாறே செயற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

சிறிதரன் எம்.பியின் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமந்திரனுக்கு ஆதரவளிப்பதால் நான் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன சிறிதரன் இன்று இந்த முடிவுக்கு வந்திருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிதரனின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் டான் தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதன் சில பகுதிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு வாக்களித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சிறிதரன் முடிவுகளைக் கலந்து பேசாமல் சுமந்திரன் தானே எடுத்துவிட்டு அவற்றை எம் மீது திணிக்க முயல்கின்றார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகச் செயற்படப்போவதாக எம்மில் பெரும்பாலோர் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைக் கூறும்போது முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளராகச் செயற்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவ்வாறே நடந்துகொண்டார் என்றும் ஆனால் அவை பாரதூரமானவையல்ல என்றும் சுமந்திரனின் செயற்பாடுகள் அவரைவிட மோசமானவை என்ற பொருள்படவும் தெரிவித்திருந்தார்.

இது ஒரு மாணவனை நீங்கள் பரீட்சையில் ஏன் தேர்ச்சி பெறவில்லை என்று பெற்றோர் கேட்டதற்கு அந்த மாணவன் பக்கத்து வீட்டுப் பையனும் தேர்ச்சி பெறவில்லை என்று சொன்னதைப் போல் உள்ளது. இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றது.

எமது கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். ஆனால், சுமந்திரன் இன்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளராகவும் கூட்டமைப்பின் பேச்சாளராகவும் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்துபட்ட கொள்கை சட்டகத்துக்குள்ளேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உத்தியோகபூர்வ பேச்சாளர் கடமைகளை ஆற்றி வந்தார். கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் தன்னிச்சையாக என்றும் தனது கருத்துகளை கூட்டமைப்பின் கருத்தாக வெளியிட்டது கிடையாது. மாறாக, உத்தியோகபூர்வ பேச்சாளராகவும் அங்கத்துவக் கட்சியின் தலைவராகவும் இருக்கக்கூடிய சுரேஷ் பிரேமச்சந்திரனுடனோ ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடனோ கலந்து பேசாமல், சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தாமே முடிவுகளை எடுத்து அதனை கூட்டமைப்பின் முடிவாக ஊடகங்களுக்கு அறிவித்த சம்பவங்கள் ஏராளம்.

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற வகையிலும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் அவர்களது செயற்பாடுகள் எமது தலைவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அங்கத்துவக் கட்சிகளுக்கு உடன்பாடில்லாத முடிவுகளை எடுத்துவிட்டு அவற்றை அங்கத்துவக் கட்சிகளின் மீது திணிக்கின்ற நடைமுறைகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எவ். மட்டுமே ஓங்கிக் குரல் கொடுத்து வந்தது. அங்கத்துவக் கட்சியின் தலைவர் என்ற வகையில், சம்பந்தன், சுமந்திரன் போன்றோரின் இத்தகைய செயற்பாடுகளைக் கூட்டமைப்புக்குள் விமர்சித்த போதிலும் அதில் தீர்வு கிட்டாமையால், வெளியில் வந்து அவர்களது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமது கட்சிக்கு ஏற்பட்டது.

உண்மைகள் இவ்வாறிருக்க, சிறிதரன் போக்கடிப் போக்கில் பொய்யாகவும் பிழையாகவும் பொறுப்பின்றிப் பேசியிருக்கிறார்.

சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருப்பதன் மூலம், தனது முடிவுகளைக் கட்சியின் முடிவுகளாகவும் கூட்டமைப்பின் முடிவுகளாகவும் தான்தோன்றித்தனமாக வெளியிட்டு வருகின்றார் என்று கூட்டமைப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை கண்கூடு.

இன்று சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்ற கருத்தை சிறிதரன் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒருபுறம் உட்கட்சிப் பிரச்சினையை பொதுவெளிக்குக் கொண்டு வருவதன் ஊடாக கட்சி என்றால் என்ன? கட்சிக்கட்டுப்பாடு என்றால் என்ன? என்று தெரியாத தனது முதிர்ச்சியின்மையையும் மறுபுறம் சுமந்திரன் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையும் எதிர்ப்போம் என்று தெரிவித்திருப்பதன் மூலம் கொள்கை அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதை விடுத்து, நபர்கள் சார்ந்து முடிவெடுத்திருப்பதானது சிறிதரனின் அடிப்படை அரசியல் அறிவைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

நாற்பத்தாறு ஆண்டுகாலமாக தன்னை முழுநேரமாக தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்காக அர்ப்பணித்துச் செயற்பட்டுவரும் ஒருவரைக் குறித்து அவராலேயே அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒருவர் அதிலும் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் சேறுபூச முற்படுவதானது படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்னும் முதுமொழிக்கு ஒப்பானது” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More