“எனக்குக் காணாமல்போனோர் அலுவலகம் பற்றி நன்கு தெரியும். ஏனெனில் கடந்த அரசின் இறுதிக் காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். இதுபற்றி எம்.பி. சுமந்திரன் கூறியதை நான் ஏற்கின்றேன். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத் தலைவருக்குப் பைத்தியமோ தெரியவில்லை. இந்த நாட்டில் யாரும் காணாமல்போகவில்லை என்று கூறுகின்றார். அப்படி பேச வேண்டாம் என்று அவருக்குக் கூறுங்கள். முதலில் அவரை அந்தத் தலைவர் பதவியில் இருந்து விலக்குங்கள்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று இந்த விடயம் தொடர்பில் சபையில் வாதப்பிரதிவாதம் நடைபெற்ற போது இது பற்றி குறுக்கிட்டு பேசிய மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:-
“காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத் தலைவர், இந்த நாட்டில் யாரும் காணாமல்போகவில்லை என்று கூறுகின்றார். உங்களுக்கு அது பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
யாரும் காணாமல்போகவில்லை என்றால் இந்த அலுவலகம் எதற்கு? சபாநாயகரே, இந்த அலுவலகம் பற்றிய சட்டமூலத்தை மிகவும் கஷ்டப்பட்டு நாம் இந்தச் சபையில் கொண்டு வந்து சட்டமாக்கினோம். இப்போது அரசு தரப்பில் இருக்கும் கூட்டம்தான் இதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தது.
நாம் மாத்தறையில் ஒரு அலுவலகம் திறந்தோம். நான் திறந்து வைத்தேன். யாழ்ப்பாணத்தில் திறந்தேன். மன்னாரிலும் திறந்து வைத்தேன்.
நீங்கள் எமது காலத்தில் விண்ணப்பங்கள் 65 தான் வந்தன எனவும், இன்று உங்கள் காலத்தில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன எனவும் இப்போது கூறினீர்கள். அந்தக் கணக்கு எனக்கு ஞாபமில்லை. தேடிப் பார்க்க வேண்டும்.
ஆனால், நிறையப் பணி செய்தோம். நீங்கள் எம்மை வேலை செய்ய விடவில்லை. இப்போது எதிரணியில் உள்ள நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். அந்தக் காலத்தில் நீங்கள் எம்மை வேலை செய்ய விடவில்லை.
1988/1989 ஆண்டு காலத்திலும், 2000 ஆம் ஆண்டுகளிலும் இந்த நாட்டில் ஆட்கள் காணாமல்போனார்கள்.
வடக்கில், கிழக்கில், தெற்கில், மேற்கில் காணமல்போனார்கள். நாடு முழுக்க நடந்தது. இந்தச் சாபத்தை, பாவத்தை முழுக்கவும் துடைத்து எறிவோம். அதனால்தான் இந்த அலுவலகத்தை நாம் அமைத்தோம்.
நீங்கள் எதிரணியில் இருந்து எமக்குத் தராத ஒத்துழைப்பை நாம் இப்போது இங்கிருந்து உங்களுக்கு தருகின்றோம். ஆனால், அந்தத் தலைவரை மாற்றுங்கள். அவரது கூற்று, இன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) மட்டுமல்ல, அவரது கூற்றுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும். அவர்கள் நல்லத்தனம் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை போலும்” – என்றார்.