“தமிழருக்கு ரணிலின் அரசியல் தீர்வா அல்லது தமிழர் இறையாண்மையா எனத் தீர்மானிக்க ஐ.நா.வின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”
– இவ்வாறு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்கள் இறையாண்மையை மூன்று வழிகளில் மீளப் பெற்றுக்கொள்ளலாம் . தமிழர்களிடம் இருந்து இறையாண்மையை யாராலும் பறிக்க முடியாது.
காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளைப் பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2100 ஆவது நாள் இன்று.
தமிழர்களைப் பாதுகாக்க ஒரே வழி பாதுகாப்பான, பாதுகாக்கப்பட் ட தமிழர் தாயகம்தான். எனவே தமிழர்களுக்கு இறையாண்மை தேவை. நாம் ஒரு சர்வதேச நீதிமன்றத்துக்குச் சென்றால், ஐ.நா. நமது இறையாண்மையை அங்கீகரிக்க வாதிடலாம். ஆனால், நமது தமிழ்த் தலைவர்கள் புத்திசாலிகள் அல்லர். 1945 ஆம் ஆண்டிலிருந்து இன்றும் கூட எமது தலைவர்கள் பெரும்பாலும் கொழும்பு தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தமிழ் தலைவர்களின் இலக்கு சட்டத்தரணிகளாகவும், சரளமான ஆங்கிலத்துடன் வடக்கு, கிழக்குக்கு அரசியல்வாதிகளாக வருவதே. கொழும்பில் தங்களுடைய முதலீடு, நண்பர்கள் மற்றும் சொத்துக்களை இழக்க அவர்கள் விரும்பவில்லை. சிங்கள அதிகாரிகளுடனான தொடர்பையே அவர்கள் விரும்புகின்றார்கள்.
இலங்கை ஒருபோதும் அரசியல் தீர்வையோ அல்லது தமிழர் தொடர்பான அரசமைப்புத் திருத்தத்தையோ நடைமுறைப்படுத்தாது என்பதையே காட்டுகின்றது. வலுவான நாடுகள் கொழும்பைச் சமஷ்டியை வழங்க நிர்ப்பந்தித்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு நடந்ததே நடக்கும்.
சமஷ்டி ஆட்சி இருந்தாலும், கொழும்பு பணம் கொடுக்காது, சமஷ்டி தேர்தலை நடத்தாது, சமஷ்டி சட்டம் – ஒழுங்கைக் கடைப்பிடிக்க தமிழர்களை அனுமதிக்காது. கண்டிப்பாக சிங்களவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சமஷ்டி முறையை அகற்ற முயற்சிப்பார்கள்.
எனவே, தமிழருக்கு, ரணிலின் அரசியல் தீர்வா அல்லது தமிழர் இறையாண்மையா எனத் தீர்மானிக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
சில பலம் வாய்ந்த நாடுகளில் இருந்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை மீது பல அழுத்தங்கள் உள்ளன என்பதை நாம் அறியக்கூடியதாகவுள்ளது” – என்றார்.