Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நுவரெலியாவில் நடந்தது என்ன? – வெளிவந்தது பலியானோர் விபரம்

நுவரெலியாவில் நடந்தது என்ன? – வெளிவந்தது பலியானோர் விபரம்

4 minutes read

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 55 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த சுற்றுலா பஸ் ஒன்று, வான் மற்றும் ஓட்டோவுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வானில் பயணித்த அறுவரும், ஓட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வானில் பயணித்த தந்தை, தாய், இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோரே பலியாகினர்.

வானில் பயணித்தவர்கள் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஓட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்:-

  1. அப்துல் ரஹீம் (வயது 55)
  2. ஆயிஷா பாத்திமா (வயது 45)
  3. மரியம் (வயது 13)
  4. நபீஹா (வயது 08)
  5. ரஹீம் (வயது 14)
  6. வான் சாரதி நேசராஜ் பிள்ளை (வயது 25)
  7. ஓட்டோ சாரதி எஸ். சண்முகராஜ் (வயது 25)

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களை ஏற்றி வந்த பஸ், மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில் அதிக வேகம் காரணமாகவும், ‘பிரேக்’ செயற்படாததாலும் நானுஓயா – ரதெல்ல பகுதியில் வைத்து வான் மற்றும் ஓட்டோ ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் சுமார் 50 அடிவரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. வானும், ஓட்டோவும் கடுமையாகச் சேதமடைந்தன.

இந்த விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சலங்கள் கையளிக்கப்படும்.

காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை ஹெலிலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இடம்பெற்று வருகின்றன.

விபத்தையடுத்து நானுஓயா குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

“வெளியிடங்களில் இருந்து வரும் சாரதிகள் நானுஓயா குறுக்கு வீதியைப் பயன்படுத்துவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அவர்களுக்கு அந்த வீதியின் தன்மை புரிவதில்லை. எனவே, சுற்றுப்பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

விபத்தையடுத்து நேற்றிரவே வைத்தியசாலைக்குச் சென்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அத்துடன், நானுஓயா குறுக்கு வீதியை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More