அரசால் தான்தோன்றித்தனமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
நுவரெலியா ‘கோட்டா கோ கம’ கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
“ரணில் – ராஜபக்ச அரசின் அடாவடித்தனத்தைக் கண்டு அஞ்சப்போவதில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறைகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். சுகாதாரமற்ற இடத்தில் – பாதுகாப்பற்ற இடத்தில் வசந்த முதலிகே தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படலாம். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிகவும் பயங்கரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம்” – என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டனர்.