நடிகர் நரேன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘குரல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
‘அஞ்சாதே’, ‘கைதி’ போன்ற படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகர் நரேன்.
மலையாள இயக்குனர் சுஜித் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘குரல்’.
இதில் கதையின் நாயகனாக நடிகர் நரேன் நடித்திருக்கிறார். கதை திரைக்கதையை ராகேஷ் சங்கர் எழுத, வசனங்களை சந்துரு எழுதியிருக்கிறார். விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, மங்கள் சுவர்ணன் மற்றும் சஷ்வத் சுனில் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நஜிப் கடிரி தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்தப்படத்தில் ஆட்டிஸம் பாதித்த வைத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நரேன் நடிப்பதாலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் ‘குரல்’ இணையவாசிகளிடம் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.