லொஸ்லியா நடித்துள்ள “Friendship” படத்தை, ஆர்வமிகுதியால் இன்று களவாகப் பார்த்தேன் – Tamil Gun இல்.
ஆரம்ப காட்சிகள் என்னை அவ்வளவாக இம்ப்றெஸ் பண்ணாததால் படத்தை ஓட்டி ஓட்டி “லொஸ்லியாவை” மட்டுமே கண் வெட்டாமல் பார்தேன்.
ஒரு ஈழம் சினிமாச் செயற்பாட்டளனாக “ஒரு நடிகரை” உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பது எனக்குத் தெரியும். அதிலும் எம் சூழலில் பெண் நடிகர்களை உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பது யாவரும் அறிந்த விடயமே.
அந்த நிலையில் “எங்கள் பிள்ளை” ஒருவர் முழுமையாகத் தன்னை நடிகையாக்கிக் கொண்டிருப்பது எனக்கு ஒரு பெரும் பலம் என்றே நான் பார்க்கிறேன்.
லொஸ்லியாவின் நடிப்பை நான் பார்த்த அளவில் அவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த நடிகையாக வளருவார் என்றே நான் நம்புகிறேன்.
இந்த Friendship படத்தைப் பொறுத்தவரை, அவருடைய நடிப்பில் “பக்குவமின்மை” பல இடங்களில் தெரிகிறது என்பது என்னவோ உண்மைதான். அதற்கு அந்தப் படமும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் அந்தப் படத்தை முழுமையாகப் பார்க்காவிட்டாலும் அது பல cliché விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.
அடுத்தது, இது லொஸ்லியாவின் முதற்படம். நடிகர் விஜய், சூர்யா போன்றவர்கள் தமது முதற் படத்தில் நடித்த அளவுக்கு லொஸ்லியா அவ்வளவு ஒன்றும் மோசமாக நடிக்கவில்லை.
இன்று கோடம்பாக்கம் சினிமாக்களில் நடிக்க வருபவர்கள் எல்லாம் ராதா, அம்பிகா காலம் போல் நேரடியாக வருவதில்லை. அவர்கள், கூத்து பட்டறை, மற்றும் நடிப்புப் பள்ளி போன்ற இடங்களில் புடம் போடப்பட்டே நடிக்க வருகிறார்கள். ஆனால் லொஸ்லியா அவ்வாறு அல்ல.
உண்மையில் எமது பெண் பிள்ளை ஒருவர் இவ்வளவு தூரம் வந்திருப்பதே எனக்கு அதிசயமாக உள்ளது.
லொஸ்லியா இவ்வளவு தூரம் வரக் காரணம் அவருடைய “புத்திக் கூர்மை” ஆகும்.
அதை நான் நேரில் கண்டவன். மொரட்டுவ பலகலைக்கழக மாணவர்கள் நடாத்திய “சொற்கணை” எனும் விவாதப் போட்டியில் அதை லொஸ்லியாவிடம் அவதானித்தேன்.
ஒரு நடிகருக்கு முதற் தேவையானதும் அதுவே – “புத்திக்கூர்மை” (Intelligent).
நடிகர்கள் விஜய், சூர்யா போண்றவர்கள் தங்கள் ஆரம்ப படங்களில் மொக்கையாக இருந்தாலும் பின்னர் அவர்கள் உச்சத்தை தொட முதற் காரணமாக இருந்தது அவர்களுடைய “புத்திக்கூர்மை” ஆகும்.
Friendship படத்தில் தனது நடிப்பில் உள்ள குறைபாடுகளையும் போதாமைகளையும் லொஸ்லியா இலகுவில் அடையாளம் கண்டு அவற்றை மேமடுத்தும் அளவுக்குப் போதிய “புத்திக்கூர்மையும் மதிநுட்பமும்” கொண்டவர் ஆவார்.
அத்துடன் ஒரு நடிகருக்கு வேண்டியது “தளராத முயற்சியும்” “தொடர் பயிற்சியும்” ஆகும். அதற்கும் லொஸ்லியா தயாரகவே இருக்கிறார் என்பது தெரிகிறது.
ஒரு நடிகருக்கு இருக்கவே கூடாத ஒன்று உள்ளது.
அது இறுக்கம் (Rigidness).
நடிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் தளர்வானவர்களாக இருக்க வேண்டும்.
இந்த விடயத்தில்தான் லொஸ்லியா பலவீனமாக இருக்கிறார். ஈழத்தமிழர்கள் எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டுள்ள இறுக்கம் லொஸ்லியாவிடமும் இருப்பது அவருடைய தவறல்ல.
லொஸ்லியா அந்த இறுக்கத்தை உடைத்து தன்னைத் தளர்வாக வைத்திருக்கப் பாடுபடுவதை “பிக் பொஸ்” இல் கூட அவதானிக்க முடிந்தது.
அவர் தான் தளர்வாகவும் இயல்பாகவும் இருப்பது போல் பல இடங்களில் நடிக்கவும் செய்கிறார் – அவருடைய பேடிகளில் கூட. ஆனால் அது பார்ப்பவர்களுக்கு விளங்கும்படியாக உள்ளது.
அந்த இறுக்கத்தையும் அவர் உடைத்தெறிந்து மிகச் சிறந்த நடிகையாக வளர்வார் என நான் திடமாக நம்புகிறேன். அப்படி அவர் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஏனெனில் நாளைக்கு எங்கள் சினிமாவுக்கான ஒரு வளமாகவும் பலமாகவும் லொஸ்லியா இருப்பார்.
ஞானதாஸ் காசிநாதர்