என்னைப் பற்றி
நான் கேள்விப்பட்ட
சுவாரஸ்யமான வதந்தி என்ன என்று
என்னிடமே கேட்கிறார்கள்
அவற்றைச் சொல்வதற்கே
கூச்சமாக இருக்கிறது
சிலருக்கு நான்
கையில் மந்திரக்கோலுடன் அனைவரையும்
மயக்கி கட்டுப்படுத்தும்
சூனியக்காரியாக இருக்கிறேன்
சிலர் என்னை
காண்போருடனெல்லாம்
உறவு கொள்ளும்
அதன் மூலம் ஜீவிக்கும்
அபலையாகப் பார்க்கின்றனர்
பிறகொரு முறை
நான் என் நெருங்கிய நண்பனோடு
கடற்கரையில் கூடியிருந்ததை
யாரோ பார்த்ததாக
யாரிடமோ சொன்னார்களாம்
இதுபோக
நான் உழைக்காமல் ஊதியம் பெறுபவளாக
திறமையின்றி வெற்றி பெறுபவளாக
முப்பொழுதும் நடிப்பவளாக
ஏமாற்றிப் பிழைப்பவளாக
அறம் அறியாதவளாக
என
ஒவ்வொருவர் யூகத்திலும்
ஒவ்வொரு உருக் கொள்கிறேன்
என்னை
தேவதையென நம்பிக் கொண்டிருப்பவனும் இருக்கிறான்
நான்
பெரிதாக சாதிப்பேன் என்றும்
எனைத் தெரியாத
யாரோ ஒருவர் பேசியதாகக் கேள்வி
ஆனால் பாருங்கள்
நானோ
ஒரு துளித் தூறலுக்காக
வானம் பார்த்துக் கொண்டிருப்பவள்.
- மித்ரா அழகுவேல்