சூரிய ஒளித்தூசி மிதக்கும் தன் வீட்டின்
முன்புறத்திலமர்ந்து
வாழ்வின் கசப்பையும் இனிப்பையும்
மிடறு மிடறாகப் பருகும் காலைகளை
இழந்துவிட்ட மனிதனிடத்தில்
அதிகாரத்திலுள்ளோரே!
கருணைகூருங்கள்
தன் ஆயுளில் அரைவாசியை
சிறையில் கழித்துவிட்டவன் கேட்பதெல்லாம்
கண்விழித்தெழும்போது
இருள் அவிழ்வதைக்
காணமுடிகிற சாளரத்தை,
‘நன்றாக உறங்கினாயா?’என வினவும்
வாஞ்சையும் சுருக்கங்களும் நிறைந்த
தாயின் முகத்தை,
அதிகபட்சமாகக் கேட்பது
சில மலர்கள்
குழந்தைகள்
பறவைகள்
வண்ணாத்துப் பூச்சிகளை.
நீதியின் வாசலை வழிமறிக்கிறவர்களே!
தீங்கற்ற மனிதனொருவனின்
நியாயமான ஆசைகளிடத்தில்
கருணை கூருங்கள்.
நோய்ப்படுக்கையிலிருக்கும்
முதிய தகப்பனிடத்தில்
நடந்தே வெடிப்பேறிவிட்ட அந்தத் தாயின்
கால்களிடத்தில்
அழுது கண்ணீர் வற்றிவிட்ட அவரது விழிகளிடத்தில்
தயைகூர்ந்து இரக்கம்வையுங்கள்.
மாரிகாலத்தின் மழைப்பொழிவை
தாவரங்களின் மலர்ச்சியை
காணாது கழிந்த தசாப்தங்கள்
இனி மீண்டுவரப்போவதில்லை.
எஞ்சிய நாட்களின்மீது
விழட்டுமே மழைத்துளி
எழட்டுமே கதிரொளி.
விடுதலை எனும்
ஒற்றைச் சொல்லால்
ஒளிரட்டும் இவ்வுலகு.
-பேரறிவாளனுக்கு….
தமிழ்நதி