Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் என்னைப் புதையுங்கள்! | வே.முல்லைத்தீபன்

என்னைப் புதையுங்கள்! | வே.முல்லைத்தீபன்

1 minutes read
Image may contain: one or more people

மரணம்தான் வரமெனில்..
செய்யவேண்டிய சிலவற்றை
செப்புகிறேன் சமூகத்திற்கு..!

கடைசி நிகழ்வுக்காக
கடன்பட வேண்டாம்.
ஆடம்பரத்தை விரும்பாதவன் நான்..!

உங்களிடம் இருப்பதை
ஊர்காட்ட விரும்பினால்..
அள்ளிக்கொடுங்கள் இல்லாதோருக்கு..!

சமயக் கிரியைகளை
சிக்கனமாகச் செய்யுங்கள் – அது
சுற்றத்தின் திருப்திக்காக..!

பறையெழுப்பி சங்கூதி
பட்டாசும் போடவேண்டாம்.
ஆரவாரமில்லா ஊர்வலம்
அமைதியாக நகரட்டும்..!

செத்துப்போன எனது
சவத்தைச் சுற்றியிருந்து
ஒப்பாரி வைக்காதீர்கள்..
நீட்டி நிமிர்ந்த நீள்துயில்
கலைந்திடக் கூடாது..!

சின்னஞ்சிறுசுகளை
கூட்டிவந்து காட்டுங்கள்.
வாழ்வின் நிலையாமையை
விளக்கிச் சொல்லுங்கள்..!

பிணத்தை வைத்தொரு
போற்றுதலும் தேவையில்லை.
தூற்றாதிருந்தாலே போதும்..!

உடலுக்கு மலரிடும்போது
கட்டாயமாகக் கவனியுங்கள்.
வாடிப்போன எனக்காக
மலரவுள்ள மொட்டுக்கள்
அஞ்சலி செய்ய வேண்டாம்..!

குருத்தோலை கழுத்தறுந்து
குடலிழந்த தோரணமாய்த்
தலைகீழாய்த் தொங்கவேண்டாம் – அது
தலைநிமிர வேண்டியது..!

எவருக்காகவும் என்னுடம்பு
காத்திருக்கத் தேவையில்லை.
இருக்கும் போதில்லையாம்
இறந்தபின்னென்ன தனித்துவம்..?

பெட்டிகூடத் தேவையில்லை..
கால்களை வாரிவிட்டோரிருந்தால்
கைகளில் தூக்கிச் செல்லுங்கள்.
பலபேருக்கது பாடமாக அமையட்டும்..!

உயிர்போன உடம்புக்கூட்டை
எடுத்துச்சென்று எரிக்காதீர்கள்.
கிடங்குவெட்டிப் ‘புதைத்திடுங்கள்’ – அது
உயிரிகளுக்காவது உணவாகிப்போகட்டும்..!

என்னுயிலில் கேட்டவற்றை
இயலுமானவரை நிறைவேற்றுங்கள்.
பிரிந்து போகும் ஆத்துமா
பெருமையாகச் சாந்தியடையட்டும்.

  • வே.முல்லைத்தீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More