இடி
-உடை
-நொருக்கு
-பழிதீர்
இளையவர்களே!
நாம் செய்ய வேண்டியவை எல்லாம்
துரும்பாயாகினும்
முளைப்பதே
முளைத்துக்
கிளைப்பதே
நீயும் நானும்
அவர்களது கருத்தில் ‘பொருட்டாயிருக்கிறோம்’ அதுவே வெற்றி தான்.
உடைத்துக் கொட்டப்பட்டவை எல்லாம்
நிலத்திலே புதையட்டும்.
கார்த்திகைக் கிழங்குகளும் புதைந்து தான் கிடக்கின்றன.
கோபம் தெறிக்கும்
கண்களை மூடி
மூளைக்கு வேலை கொடுங்கள்.
ஆற்றாமை வழியும்
கண்களைத் துடைத்து
விழியில் சுடரேற்றுங்கள்.
கல்வி என்பது
பாடப்புத் தகங்களில் மட்டுமே
பாடசாலைகளில் மட்டுமே
பல்கலைக் கழகங்களில் மட்டுமே இருப்பதாகக் கருதுகிறார்களா?
போகட்டும் விடுங்கள்.
உங்களால் முடிய வேண்டும் முள்ளிவாய்க்காலில் ஒரு பல்கலைக்கழகம் கட்ட.
ஆம் இளைஞர்களே,
கல்வி எனும் ஆயுதத்தை கையாளக் கற்றுக் கொள்ளுங்கள்.
அந்த ஆயுதம்
சிற்பங்களைச் செதுக்கும் கூருளிகளாகவும்
கல்விக் கூரைகளை அமைக்கும் கைநேர்த்தியைக் கொண்ட வலியனவாகவும் அமைய வேண்டும்.
கற்கள் வழி கடத்தும் நம் பண்பாட்டை வாழ்விக்க நம்மைத் தவிர யாரால் முடியும்.
வெற்றிச்செல்வி