01
கடல்
உன்னை அணைக்கச் சொல்கிறது.
காற்று
உன்னை தீண்டச் சொல்கிறது
கரை
உன்னை மலர்விக்க சொல்கிறது
காதல்
உன்னை ஸ்பரிசிக்க சொல்கிறது
காமம்
நம்மை காண்பிக்க சொல்கிறது
என் தீஞ்சுடரே!
கடலுக்கு முன் கடலே வா
காணலாம்.
02
இன்றும் அந்தக் கடலுக்கு மேல்
பறந்து போகும்
காகம் நான்.
எதிர்க்காற்றில் சோளம் வாட்டும்
தீக்கங்குகளில் உன் சரீரத்தின் செம்மை
கடலின் குளிர்த்திரையில்
நம் பாஷைகள் சப்தமற்றவை.
உன் கூந்தல்
உன் கால் விரல்கள்
உன் உள்ளங்கைகள்
காதலின் வியத்து வியர்க்கின்றன.
இன்று அந்தக் கடல் முன்
இருள் வானத்தின்
கீழிருந்து
நீயென்னை அணைத்தால்
ஒரு வெள்ளி பூமியில் பூக்குமோ
என் வெட்கப்புழுவே!
03
கவிதைகளை கடல் முன்
படையலிட்டு
உன்னை முத்தமிட்டால்
சரீரிப் பேரலை
இன்னுமோர் கவிதை கேட்கும்,
கேட்கட்டுமே!
அகரமுதல்வன்