மறைந்த கல்விப் பேராளுமை சோ. சந்திரசேகரத்திற்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
அவர் தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளதாவது,
“எங்கள் புலமைமரபில் கல்வியியல் பேராளுமைமையாக நிமிர்ந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் பிரிவு நெஞ்சுக்கு கனமானது.
ஆழ்ந்தகன்ற சிந்தனையாளராக அவரது வாழ்வும் பணியும் விரிந்திருந்தது.
கொழும்பு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானக் கல்வித்துறைத்தலைவர், கல்வியியல் பீடாதிபதி, தேசிய கல்வி ஆணைக்குழு அங்கத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறை வளவாளர் என இலங்கை கல்வியியல் புல வளர்ச்சியில் அவரது பங்களிப்பு காத்திரமானது.
அவரிடம் பாடம் கேட்ட ,அவரோடு கலந்துறவாடிய பொழுதுகளின் மகத்துவம் இணையிலாதது.அயராத தேடலுடன் அவர் எமக்களித்த சிந்தனைக் கருவூலங் களான நூல்கள் காலந்தோறும் எங்கள் கல்விப்பணிகளுக்கான கலங்கரை விளக்கமாகும்.
தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் கல்விபயின்று, பேராதனை பல்கலைக்கழகம், ஹிரோசிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வியியல்ஆற்றலினை வளர்த்து தேச முழுமைக்குமான பேராளுமையாக விளங்கிய அவர் மேலான நினைவுகளை காத்திருப்போம்.
அவரது கல்வியியல் கனவுகள் மெய்ப்பட, குறிப்பாக மலையக பல்கலைக்கழகம் என்ற அவரது முன்மொழிவு வசப்பட அனைவரும் ஒன்றிணந்து உழைப்பதே அவருக்கு உவப்பான அஞ்சலி என்பேன்… என்று மேலும் குறிப்பிட்டார்.