இன்று கிடைத்தது; நன்றி ரூபன். இப்படிப் புத்தகங்கள் கிடைக்கிறபோது மகிழ்வு கொள்கிறேன். கவிதை, புனைகதை என்பன வரட்டும். அதேசமயம் உங்கள் புலம்பெயர் வாழ்வனுபவங்களை எழுதுவதும் வரலாற்றுக்குத் தேவை. கருணாகரமூர்த்தி, செல்வம் அருளானந்தம்.. போன்றோர் புலம்பெயர் வாழ்வனுபவங்களை அற்புதமாக எழுதியுள்ளனர். ரூபனும் அது பற்றி யோசிக்கலாம்.
ரூபனின் புத்தகத்தைத் ‘தட்டி’ப் பார்த்தேன். 45 ஆம் பக்கத்தில் ஒரு வரி: “தொடுதிரைகளுக்கு/ விடுப்புக்கொடு/ மனம் விரி/ விழி திற/ என்னைத் தரிசி/ என்றழைக்கிறது/ .. செம்பொன் பரிதி”
இங்கு இரண்டு விசயங்களைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
கவிவரிகளை அடுக்குவதில் இவ்வளவு ‘சுருக்கம்’ வேண்டுமா என்பது ஒன்று. இதை இவ்வாறு வரி பிரித்தால் என்ன; பொருள் மயங்கவில்லையே! “தொடுதிரைகளுக்கு விடுப்புக்கொடு/ மனம் விரி/ விழி திற/ என்னைத் தரிசி என்றழைக்கிறது/ .. செம்பொன் பரிதி”.
இன்னொன்று, “மனம் விரி/ விழி திற” என்பது இவ்வாறு வந்தால் என்ன; “விழி திற/ மனம் விரி” ‘விழி திறந்தால் மனம் விரியும்’ என்பது பொருத்தமல்லவா? ‘மனம் விரிந்தபின் விழி திறப்பது’ பொருத்தமாக எனக்குப் படவில்லை. ஆயினும் படைப்பாளியின் உணர்வில் தலையிடமுடியாது என்பதனை நான் நன்கு அறிவேன்.
மீண்டும், நன்றியும் வாழ்த்தும் சந்தோசமும் ரூபன். தொடரட்டும், உங்களது தமிழுக்கும் எழுத்துக்குமான பணி.
எழுத்தாளர் இரவி அருணாசலம், (14.04.21)