ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம் நாவலுக்கு இலங்கை அரசின் சாஹித்த மண்டல விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பச்சை வயல் கனவுக்காக அரசின் சாஹித்த மண்டல விருது பெற்ற தாமரைச்செல்வி இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார்.
சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலானது, அண்மையில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.