ஈழத் தமிழர் கலை அடையாளமாய் உலகின் உயர் மலை முகடுகளைத் தாண்டி நோர்வே ஒஸ்லோ நகரில் ஒளிர் பெற்ற இன்னியத்தின் எழில்.
நோர்வே தமிழர் வள நிலையம் அன்னை பூபதி கல்வி கலைக் கூடத்தின் முப்பதாவது அண்டு முத்து விழாவில் 30.04.2022 சனிக்கிழமை ,இன்னிய அணியின் எழிலார்ந்த அறிமுகத்துடன் ஆரம்ப நிகழ்வுகள் அமைந்து விழாவின் முகிழ்பாய் இன்னியம் பெருங் காட்சியாய் ஈழத் தமிழர் கலை அழகியலின் ஈழ நாடிய முத்திரைகளுடன் ஆடல் கோலமாய் உலகில் முதன் முதலாய் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்ட இன்னிய அணியாய் அமைந்து விழாவுக்கு புது அர்த்தத்தை தந்து நின்றது.
பார்த்தவர்கள் பரவசப் பட்டு நின்றனர் உடை அமைப்பும் இசையும் நடனமும் ஈழத் தமிழர்களது தனித்துவ கலை அடையாளங்களைப் பிரதிபலித்து நம் பண்பாட்டு அணியாய்.
இனியத்தின் தொடக்கம் கிழக்குப் பல்கலைக்கழக உலக நாடக தின விழாவில் தலைக் கோல் ஊர்வல அணியாக 1997 ஆம் ஆண்டு தொடங்கிய இன்னியக் கலை பயணம் இந்த ஆண்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது இன்று வடக்கு கிழக்கு மலையகம் என தமிழ் பாடசாலைகளில் தமிழ் பாண்ட் எனும் அங்கிகாரத்தை பெற்றமையோடு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிபு விழாவிலும் அறிமுகமாகியுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1999ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தொடங்கி இன்று வரை இன்னியத்தின் தொடர்ச்சி நீட்சி உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
நோர்வேயில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த இன்னிய பயிற்சிகளும் அறிமுகமும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக அதன் தொடர்ச்சியும் இன்று வரை இன்னியம் விழாக்களில் ஆரம்ப நிகழ்வாய் ,பொங்கல் விழாக்கள் ஆண்டு விழாக்கள் ஆகியவற்றில் நம் அழகியலின் அர்த்தத்தை வெளிப்படுத்தி நீள்கிறது.
இந்தப் பயணத்தில் என்னோடு இணைந்து பணியாற்றிய எல்லோருக்கும் என் நன்றிகள்.
-பாலசிங்கம் சுகுமார்