Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் கவிதை | ஒரு கொரோனா நோயாளியின் வீடு | மனுஷ்ய புத்திரன்

கவிதை | ஒரு கொரோனா நோயாளியின் வீடு | மனுஷ்ய புத்திரன்

1 minutes read

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட
கொரோனா நோயாளி
தன் வீடென
தன் வீட்டில் எதையும் உணர்வதில்லை

கையுறை அணிந்த கைகளால்
தயங்கித் தயங்கி தொடுகிறான்
கதவுகளையும் குழாய் திருகுகளையும்

தனித்த கொடியில் காயும்
தன் உடுப்புகளில்
சொட்டும் ஈரத்தை
உற்றுப்பார்க்கிறான்

தனது அறையின் இருக்கையைத்தவிர
எந்த இருக்கையிலும்
அவன் மறந்தும் அமர்வதில்லை

யாருமில்லாதபோது
வீட்டின் வரவேற்பறையின்
எதையும் தொட்டுவிடாமல் நடந்து
முகக்கவசத்தை சற்றே இறக்கிவிட்டு
ஆழமாக மூச்சு விடுகிறான்

நாளெல்லாம் ஒருவார்த்தை
பேசாமலிருந்து வலிக்கும் தாடைகளை
திறந்து மூடுகிறான்
கருணையுடன் எப்போதாவது
யாராவது பேச்சுக்கொடுக்கிறார்கள்
அவனுக்குச் சொல்ல
எந்த மறுமொழியும் இல்லை

தொலைபேசி உரையாடல்கள் எதுவும்
அரை நிமிடத்திற்கு மேல் நீடிப்பதில்லை
தன் அவலமான நிர்வாணத்தை
பிறர் காண்பது
அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது

பிரத்யேக இடங்களில்
அவனது பிரத்யேக சாப்பாட்டுத்தட்டுகளும்
கரண்டிகளும்
அமைதியாக தூங்குகின்றன

பிறிதொரு அறையில் கேட்கும்
சிரிப்பொலிகளை
உற்றுக்கேட்கிறான்
குழந்தைகளின் முகங்களை
நினைத்துக்கொள்கிறான்

தன்னை எதிர்கொள்ள நேர்பவர்கள்
தன்னிடமிருந்து அவசரமாக
விலகுவதன் பதட்டத்தை
அவனால் புரிந்துகொள்ள முடிகிறது
அவர்களுக்காக
உண்மையில் அவன் வருந்தவே செய்தான்

தனது கழிவறையை
கிருமிநாசினிகளால்
திரும்பத் திரும்ப
கழுவிக்கொண்டேயிருக்கிறான்

பல நாட்கள்
மாற்றப்படாத தன் படுக்கை விரிப்பின்
சிதறிய உணவுத்துணுக்குகளைத் தட்டுகிறான்
விளக்கணைத்ததும்
அமைதியின் இருள் கனிகிறது

வாழ்க்கையில்
எப்போதோ இட்ட கடைசிமுத்தங்கள்
மனதைக் கனக்கச் செய்கின்றன

தலை வலிக்கத் தொடங்குகிறது
நெற்றிபொட்டை யாராவது
சற்று அழுத்திவிட்டால் நன்றாக இருக்குமென
ஒரு கணம் நினைக்கிறான்
கழிவிரக்கதுடன் அந்த எண்ணத்தை
விலக்குகிறான்

கொரோனா நோயாளி
தன் வீட்டில் வேண்டாத விருந்தாளியாய்
தன்னை உணர்கிறான்
தான் ஒரு அபாயகரமான விலங்காக மாறிவிட்டது
அவனை மனமுடையச் செய்கிறது
மறுபடி தான் மனிதனாவதற்கு
இன்னும் எத்தனை நாட்கள்
என எண்ணியபடி
உறங்கிப்போகிறான்

இதெல்லாம் முடிந்தபிறகு
எல்லோரிடமும்
மன்னிப்புக்கேட்டுக்கொள்ள வேண்டுமென
கண்கள் பனிக்க
பாதிதூக்கத்தில் நினைத்துக்கொள்கிறான்

மேலும் தன் வீட்டைவிட்டு
சீக்கிரமே
நீண்ட தொலைவு சென்றுவிடவேண்டுமெனவும்

27.7.2020
இரவு 9.28


மனுஷ்ய புத்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More