நம்மைச் சுற்றி நடைபெறும்
மரணம் எனும் நாடகத்தின் பார்வையாளர்கள் நாம்.
எதிர்பாராத நேரங்களில்
நாமே அதில் நடித்து விடுகிறோம்.
நாம் நாளைக்கே சாகப் போகிறவர்கள் இல்லை
என்று மனசார நம்புகிறோம்..
தனது நிழல் நம்மீது விழும் அளவுக்கு
அருகில் நிற்கும் மரணத்தை
நாம் உதாசீனம் செய்கிறோம்
மரணம் நம்மை நெருங்கி வருவதை
காலம் தவறாமல் நொடிக்கு நொடி அறிவிக்கும்
விலையுயர்ந்த சுவர்க் கடிகாரங்களை
வாங்கி வந்து சுவரில் மாட்டுகிறோம்.
.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
எனும் பாடலை ரசித்துக் கேட்கிறோம்.
நொப்பும் நுரையுமாய்ப் பெருக்கெடுத்து ஓடும்
காலத்தின் நதியில் மிதக்கும் ஒரு நுரை நாம்
என்பதை வசதியாக மறக்கிறோம்..
மரணம் காத்திருக்கிறது.
மற்றவர்களைக் கொலை செய்ய முடியாதவர்கள்
தன்னைக் கொலை செய்து கொள்கிறார்கள்.
மரணம் எனும் ஜோக்
மற்றவர்களைப் பற்றியதாக இருக்கும்வரை
வெளியே அழுது உள்ளே சிரிக்கிறோம்
நாம் உயிர் பிழைந்திருத்தலின் கொண்டாட்டத்துக்காக.
இந்திரன்