நீரோ மன்னனின் ஆவி
இலங்காபுரிக்குள் புகுந்தது;
தீக்குப் பஞ்சமேற்பட
ஃபிடிலைப் பறித்து
எரித்தனர் குடிகள்!
ஃபிடில் விறகான ஆத்திரத்தில்
குடிசைகளை எரித்தது ஆவி;
கடைசியில் நகரம்வரை
பரவிற்று பஞ்சத்தீ!
பற்றியெரிவது கண்ட ஆவி
ஃபிடிலின்றிப் பதைபதைத்து
கிளியை அழைத்துப்
பாட வைத்து மகிழ்ந்தது!
‘கிட்டார் கம்பி மேலே நின்று’
தெரிந்த சொற்களையே
கீச்சியது பாவப்பட்ட கிளி;
ஆவியும் இன்புற்றுச் சிரித்தது!
மக்கள் தீயில் வெந்தனர்
பட்டினியில் செத்தனர்
யாவுமறிந்த மன்னன்
யாதுமறியாப் பொம்மையென
மகிழ்ந்தான்!
மகிழ்ந்தான்!
மகிழ்ந்தான்!
உரோமாபுரியின் சாம்பலுக்கும்
இலங்காபுரியின் சாம்பலுக்கும்
வித்தியாசமேதுமில்லை;
அரசனே எரித்தான்!
அரசனே மகிழ்ந்தான்!
அங்கு ஃபிடில்;
இங்கு கிட்டார்!
சி.கிரிஷாந்த்ராஜ்