காலத்தின் விசித்திரங்களில் நான்
மோகித்திருக்கும்போது அவர்கள்
எங்களிடம் வந்தார்கள்
ஆதியூழியில் ஊர் தின்ற
கொடுநெருப்பின் நாக்குகளாய்
வார்த்தைகளை உதிர்த்தார்கள்
நான் பேசும் ஆதிமொழியில்
அவர்களின் உதடுகள் அசைந்து
ஆலகாலமும் அஞ்சி ஒடுங்கும்படி
பேசிக்கொண்டார்கள்
அழிவை எழுதும் ஆயுதங்கள்
தரித்திருந்த கைகள் மேலெழுந்து
என்னில் குறிவைத்துக்கொண்டது
விரும்பிய சொற்களைப்பொறுக்கி
வார்த்தைகளாக்கி வசைமொழியில்
என்னை கொன்றுவிடவே முயன்றார்கள்
நான் செய்த குற்றங்களென
அடுக்கடுக்காய் அவர்களின் வார்த்தைகளை
ஆரங்களாக்கி அணிவித்தார்கள் என் மீதில்
குவிந்துகொண்டே போன குற்றங்களை
மறுக்கும் கனங்களிலெல்லாம்
கருணைகள் ஒரேயடியாக வற்றிவிடப்போவதில்லை
என்ற சித்தாந்தம் தலைதெறிக்க ஓடி ஒழிந்துகொண்டது
மயிர்கூச்செரியும் தோல்களின் மீதில்
கீறல்களில் பிளிறிட்டு வெளிவந்தது
அம்மாவிடம் நான் குடித்த தாய்ப்பால்
என் நிலத்தையும்
நீண்டு வளர்ந்த பனங்கூடல்களையும்
மீன் பாடும் கடலையும் இன்னும்
பச்சை வயல்களையும்
காப்பவர்கள் தாங்களதான்
என்று என்னிடத்தில் அடிக்கடி
சொல்லியும் வைத்தார்கள்
சில நாட்கழித்து அவர்கள்
அவர்கள் போய்விட்டார்கள்
காவல் காக்கவென்று
என் நினைவுகளில் சுரந்தபடி
அவர்கள் ஏறிப்போனது
நான் வரைந்து வைத்த பாதையும்
அதன் சுவடுகளையும் மிதித்து
அழித்தபடி
ஆனால் நான் கைகால்கள்
கட்டப்பட்டபடி அந்த ஆற்றோர
படுக்கைகளில் கிடத்தப்பட்டிருகிறேன்
இப்போது என்னில் இரத்தம் பீறிடவில்லை
அது காய்ந்திருந்தது கண்கள் சொருகியிருந்தது
செங்குத்தாக
பிரியங்கன் பாக்கியரெத்தினம்