ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இந்த முறையும் இலங்கை அரசாங்கம் காப்பாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றவிசாரணை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ள போதும், ஏனைய அங்கத்துக்கு நாடுகளுள் பெரும்பாலானவை இலங்கைக்ககு எதிராக சாதாரண பிரேரணை ஒன்றுக்கே தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை இந்தியாவினால் திருத்தப்படாதிருந்தால், அது நிறைவேற்றப்பட்டிருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த தடவையும் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவம் கொண்ட நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கையின் பொறுப்புக் கூற வேண்டிய விடயங்களில் காலதாமதமற்ற செயற்பாட்டினை கோரிய பிரேரணை ஒன்று மாத்திரமே முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 48 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வியட்னேம் போன்ற நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக அறிவித்துள்ளன.
அதேபோன்று இலங்கையை அழுத்தங்களுக்கு உட்படுத்தினால், அது சீனாவை ஆதரவை நோக்கி நகரும் என்ற அச்சத்தில், இந்தியாவும், ஜப்பானும் கூட இலங்கையை கைவிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் பிரேரணை மென்படுத்துவதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்காக, ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் ஸ்டீவன் ரெப், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரண கோரிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெரிவித்திருந்தார். அதேபோன்று பிரித்தானியும் இலங்கைக்கு எதிரான விசாரணை ஒன்றை கோரும் என்று அதன் பிரதமர் டேவிட் கெமஷரூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.