முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனைக்கு ஏற்றவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி தங்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரியிருந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதால் தங்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட வேண்டுமென மூவரும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதற்கு முன்னுதாரணமாகமற்றொரு வழக்கில் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனதால் தூக்குத் தண்டனை கைதிகள் சிலரின் தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அது போல் தங்களின் தண்டனையையும் குறைக்க வேண்டும் என தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் உச்ச நீதிமன்றிடம் வலியுறுத்தினர்.
அவர்கள் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இதை நேற்று முன்தினம் வலியுறுத்தியபோது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் காலதாமதத்தை ஏன் பார்க்கிறீர்கள்? அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையை பாருங்கள் என்றனர். மேலும் இவர்கள் மூவரும் தூக்குத் தண்டனைக்கு ஏற்றவர்கள் தான் எனவும் கூறினர். இந்த வழக்கில் கருணை மனு தாமதம் குறித்த மத்திய அரசின் பதில் மனு பெப்ரவரி 4 இல் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்குப் பிறகுதான் இறுதி முடிவு கிடைக்கும்