தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில், தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டு தமது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக தாயகத்தில் இன்னுயிர் நீத்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோரும் உரை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்துள்ளனர்.
கஜேந்திர குமார் பொன்னம்பலம் இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிச்சயம் ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் என்றும், அதனை உரிய முறையில் நாம் பயன்படுத்தவேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 13 வது திருத்தச் சட்டத்தை அமுலாக்கலாம், அல்லது நல்லினக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றலாம் என்று கூறுவது மிகவும் முட்டாள் தனமான விடையம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். காரணம் என்னவென்றால் அவர்கள் அதனூடாக காலத்தை கடத்துவார்கள் அத்துடன் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதும் ஒரு வகையில் இன அழிப்பே என்றும், இதனூடாக தமிழர்கள் தமது அடையாளத்தை இழக்கவுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே நாம் காலத்தை கடத்தாது, உடனடியாக நில ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்தியுள்ளார்கள்.