காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய பயணிகள் விமானம் திரும்பி வரலாம் என்ற எதிாப்பார்பைத் தவிடுபொடியாக்கும் செய்தியாக அவ்விமானத்தின் ஒர் பகுதி நடுவானில் உடைந்திருக்கலாம் என இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுள்ள மலேஷியாவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவில் இருந்து சீனாவிற்கு பயணித்த குறித்த விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பயணித்துள்ளதுடன், இதன்போது விமானம் உடையக் கூடிய சாத்தியமே உள்ளதாக குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே காணாமல் போன விமானத்தினது என சந்தேகிக்கப்படும் இரண்டு பாகங்கள் தமது நாட்டின் தென்பிராந்தியக் கடற்பரப்பில் உள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக வியட்நாம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை விமானத்தின் சேதமடைந்த பாகங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பன்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு அணியினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.