இங்கையைப் பற்றி வேறு நாடுகளிலிருந்து சிலர் தவறான அபிப்பிராயத்தைத் தெரிவிக்கின்ற போதும் நான் இந்நாட்டில் கண்டுணரும் உண்மை நிலையை அவர்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறுவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஹெனயுங் தெரிவித்தார்.
காலி – மாத்தறைக்கான அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கை தவறான வழியில் பயணிக்கும் ஒரு நாடா என என்னிடம் கேட்டவர்களுக்கு, ‘இல்லை இலங்கை மிக நேர்மையான பாதையில் பயணித்து முன்னேறி வரும் நாடு’ என நான் கூறினேன். ஏனெனில் நான் பதவியேற்று இரண்டு வருடங்கள் இலங்கையில் தங்கியுள்ள காலத்தில் நான் கண்டுணர்ந்த உண்மை அது எனவும் தெரிவித்தார்.
காலி – மாத்தறைக்கான அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாத்தறை கொடகம சந்தி பிரதேசத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சீனத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலருடன் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றிய சீனத் தூதுவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், நான் இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பதவியேற்று வந்த இரண்டு வருடங்கள் ஆகின்றன. நாளுக்கு நாள் இந்த நாடு முன்னேற்றமடைந்து வருவதை நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன். இலங்கை உலகின் முக்கிய அவதானத்திற்கு உட்பட்டு வரும் நாடு.
இந்த நாடைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறினாலும், இது சரியன பாதையில் பயணிக்கின்ற நாடு என்பதே எனது கருத்து, இந்த நாட்டில் இன்னும் மேற்கொள்ளக்கூடிய பல விடயங்கள் இருப்பது உண்மை. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு கடந்த நாலரை ஆண்டுகளில் ஆசியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் பிரபல்யமான நாடாக இலங்கை மாறி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.