படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கைதுகள் என்பவற்றை கண்டித்து வட மாகாண சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
வட மாகாணசபையின் பேரவைச்செயலகத்திற்கு முன்பாக ஏ- 9 வீதியில் இன்று (18) பிற்பகல் மாகாண சபையின் அமர்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் போர்க்காலத்தில் காணாமற்போனவர்களை தேடி அலையும் குடும்பங்களின் போராட்டத்தை முடக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், வன்னியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தொடரும் கைது நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் தொடரும் கைதுகள் என்பது தொடர்பில் சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்தி தமிழருக்குகெதிரான அடக்கு முறைகளைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென உறுப்பினர்களால் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் பங்குபற்ற வில்லை. ஏ-9 வீதியில் இடம்பெற்ற இந்தக் கண்டனப் போராட்டத்தை பொலிஸார் தடுக்க முற்பட்டபோது மாகாணசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமையினால் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் நேற்று (17.03.2014) பிற்பகல் வடமாகாண சபையின் முதலமைச்சர் தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைவாக இடம்பெற்றது.