பலவித பிரச்சனைகளுக்கு பிறகு ஏகப்பட்ட குழப்பங்களுடன் ஒருவழியாக பாரதிய ஜனதா கூட்டணி தொகுதி உடன்பாட்டை முடித்தது. ஆனால் இந்த கூட்டணிக்குள் பலவித முரண்பாடுகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கூட்டணியில் இருக்கும் வைகோ தனி ஈழம் வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர். தனி ஈழத்திற்காக பல ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால் இன்று சென்னையில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பேசிய மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது என்றும் இலங்கை ஒரே நாடாக இருக்கவே இந்தியா விரும்புகிறது என்றும்இ இலங்கையின் சாசனத்திற்கு உட்பட்டு தமிழர்களுக்கு அனைத்து உரிமையையும் வாங்கிக்கொடுப்போம் என்று பேசியுள்ளார்.
இவருடைய பேச்சு கூட்டணி தலைவர்களுக்குள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்தை வைகோ, ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும் நேரடியாக இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மக்களிடையே இந்த கூட்டணி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
வைகோ இதை எப்படி ஏற்றுக்கொள்வார் என்று தெரியவில்லை என தொண்டர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். பாரதிய ஜனதாவின் முகத்திரை கிழிந்து விட்டது என்றும், தனி ஈழத்தை ஆதரிப்பது உண்மையானால் வைகோ, கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.