டெல்லியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீஸார் வித்தியாசமான தண்டனை கொடுத்து அசத்தி வருகின்றனர். ஆல்கஹால் குடித்துவிட்டு டிரைவிங் செய்பவர்கள் முதலில் ஒரு உறுதிமொழியை ஒரு பேப்பரில் எழுதித்தரவேண்டுமாம். இனிமேல் குடித்து விட்டு டிரைவிங் செய்ய மாட்டேன் என்று அவர் கைப்பட எழுதி கையெழுத்திட்டு வரும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த கடிதம் மீண்டும் அவர்கள் இதே தவறு செய்யும்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு பயன்படும் என போலீஸார் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
அதுமட்டும் இன்றி குடித்துவிட்டு டிரைவிங் செய்யும் அனைவரும் கண்டிப்பாக போலீஸாரால் நடத்தப்படும் இரண்டு மணி நேர வகுப்பில் கலந்து கொண்டே ஆகவேண்டும். இந்த வகுப்பில் டிரைவிங் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்தும், குடித்து விட்டு டிரைவிங் செய்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து பாடம் எடுக்கப்படும். இந்த வகுப்பில் கலந்து கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும்.
இதுவரை இந்த வகுப்பிற்கு சுமார் 1500 பேர் கலந்து கொண்டுள்ளனர் என போலீஸார்களின் புள்ளிவிபரக் குறிப்பு ஒன்று கூறுகிறது. டெல்லியில் தினமும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 28 டிரைவர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு வருகின்றார்கள் என்று அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.