கிழக்கு மாகாணத்தில் அரச நியமனங்களை மேற்கொள்ளும்போது மாகாண இனவிகிதாசாரத்தைப் பேணுவதற்கு மாகாண அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.
அந்த யோசனையை ஆராய்ந்த மாகாண அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது என்று மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
மாகாண அமைச்சரவையின் இந்த முடிவு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் மாகாணத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நியமனங்கள் வழங்கப்படுகின்றமை மாகாணத்தில் வேலையில்லாப் பிரச்சினையை பெருமளவு குறைப்பதற்குத் துணையாக அமைந்துள்ளது.
எனினும், இவ்வாறான நியமனங்களின் போது, திறமை அடிப்படையை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் போது மூன்று இனங்களும் மிக நெருக்கமாக வாழும் கிழக்கு மாகாணத்தில், கல்வியில் பின் தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு வருகிறது.
தூரப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த பிரதேச வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுகின்ற போது, மிகக் குறுகிய காலத்துக்குள் இடமாற்றம் பெறவோ, அல்லது தொழிலை விட்டுவிடுவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில்கொண்டு இனிவரும் காலங்களில் அரச நியமனங்கள் வழங்கப்படும் போது, மாவட்ட வெற்றிடங்களையும், மாகாண இன விகிதாசாரத்தையும் கவனத்தில் கொண்டு, நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதியைக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். அதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என்றார்.