ஜார்ஜியா நாட்டில் உள்ள ஒரு வங்கியின் காசாளர் தவறுதலாக மாணவன் ஒருவனின் சேமிப்புக்கணக்கில் $31,000 பணத்தை வரவு வைத்துவிட்டார். ஒரு வாரம் கழித்து தான் செய்த தவறு தெரிந்து அந்த மாணவனிடம் தகவல் கூறியபோது, அந்த மாணவன் ஏறக்குறைய பணம் முழுவதையும் செலவு செய்திருப்பது தெரிந்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஜார்ஜியா நாட்டில் First Citizens Bank in Hull என்ற வங்கியில் சென்ற 7ஆம் தேதி Steven Fields என்பவர் தனது கணக்கில் $31,000 வங்கியில் டெபாசிட் செய்தார். ஆனால் வங்கி காசாளர் அந்த பணத்தை அவருடைய பெயரில் வரவு வைக்காமல் தவறுதலாக அதே பெயருடைய 18 வயது மாணவர் ஒருவரது வங்கிக்கணக்கில் வரவு வைத்துவிட்டார்.
தற்செயலாக தனது அக்கவுண்டில் பணம் எடுக்க வந்த அந்த மாணவன், தனது அக்கவுண்டில் $31,000 பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக $20,000 பணத்தை எடுத்து தனது நண்பர்களுடன் உல்லாசமாக செலவு செய்துவிட்டார். மேலும் தனது ஏ.டி.எம் கார்டை உபயோகித்து $5,000 பணத்திற்கு தனக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டார்.
ஒருவாரம் கழித்து Steven Fields தனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்ததும் வங்கியில் புகார் செய்தபோதுதான் வங்கிக்காசாளர் தவறு செய்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த மாணவனுக்கு தகவல் தந்து விசாரணை செய்தபோது, அவன் ஏற்கனவே பணத்தின் பெரும்பகுதியை செலவு செய்திருப்பது தெரிய வந்தது.
இதனால் வங்கி அதிகாரி போலீஸிடம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுபோன்று ஏற்கனவே பதிவு செய்த ஒரு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.