இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 86 ரன்னும் (94 பந்து, 11 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 44 ரன்னும் எடுத்தனர். கேப்டன் மிதாலிராஜ் (8 ரன்) ரன்-அவுட் ஆனார். பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 52 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் தொடக்க வீராங்கனை பெத் மூனி நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்தார். அவருக்கு தாலியா மெக்ராத் (74 ரன்கள்) நன்கு ஒத்துழைப்பு தந்தார்.
இதைத்தொடர்ந்து நிகோலா கேரி, பெத் மூனியுடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்கள். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி வீசினார். இதில் கடைசி பந்தில் 3 ரன் தேவையாக இருக்கையில் நிகோலா கேரி அடித்த பந்தை கேப்டன் மிதாலி ராஜ் ‘கேட்ச்’ செய்தார்.
இதனால் வெற்றி பெற்று விட்டதாக இந்திய அணியினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் இந்த உற்சாகம் அடுத்த சில நொடிகளில் கரைந்து போனது. இடுப்பு உயரத்துக்கு மேலாக புல்டாசாக வீசப்பட்ட அந்த பந்தை 3-வது நடுவர் ‘நோ-பால்’ என்று அறிவித்தார். இதனால் ‘எக்ஸ்டிரா’ வகையில் ஒரு ரன் வந்தது. இதையடுத்து மீண்டும் வீசப்பட்ட இறுதிபந்தில் கேரி துரிதமாக ஓடி 2 ரன் எடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 275 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன், தொடரையும் கைப்பற்றியது. ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 26-வது வெற்றி இதுவாகும். 2-வது சதம் அடித்த பெத் மூனி 133 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 125 ரன்னும், நிகோலா கேரி 39 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. கேட்ச் மற்றும் சில ரன்-அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். பீல்டிங்கில் கச்சிதமாக செயல்பட்டிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.