2022 ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ச, வனிந்த ஹசரங்க, துஷ்மன்த்த சமீர, மஹீஷ பத்திரண, மஹீஷ் தீக்சண, சாமிக்க கருணாரட்ண ஆகிய 7 பேர் களமிறங்கவுள்ளனர்.
இந்த ஆண்டு 6 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அபுதாபி T10 லீக் தொடரானது, எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற உள்ளது.
இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் வீரர்களை எடுப்பதற்கான வீரர்கள் ஏலம் கடந்த திங்களன்று (26) நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான சாமிக்க கருணாரட்ணவை மோரிஸ்வில் சேம்ப் ஆர்மி அணியும், துஷ்மன்த சமீரவை நொதர்ன் வோரியர்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ச, மகீஷ் தீக்சன மற்றும் மதீஷ பத்திரண ஆகியோரை அவர்களது முன்னைய அணிகள் அவர்களை தக்கவைத்துக் கொண்டனர். இதன்படி இந்த ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடரில் இலங்கை வீரர்கள் 7 பேர் விளையாடவுள்ளனர்.
தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ச மற்றும் மஹீஷ் தீக்சன ஆகியோர் மீண்டும் சென்னை பிரேவ் அணியால் தக்க வைக்கப்பட்டதுடன், இலங்கை அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹஸரங்கவை நொதர்ன் வோரியர்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டது. மேலும், லசித் மாலிங்கவின் சாயலில் பந்துவீசும் இளம் வேகப்பந்துவீச்சாளரான மஹீஷ் பத்திரண பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
2021 ஆம் ஆண்டு வரை 6 அணிகள் மாத்திரம் பங்கேற்று வந்த இத்தொடரில், இம்முறை அணிகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.