யாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன், பாடசாலையை விட்டு போகும் வரை அவனொரு கடும் குழப்படிக்காரனகாவே இருத்தான்.
ஐந்தாம் வகுப்பில் எங்களுக்கு தேவதாசன் மாஸ்டர் தான் வகுப்பாசிரியர், குழப்படி விட்டால் அடி பின்னி எடுப்பார். சிவக்குமரனிற்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது, தான் அடி வாங்கும் போது பிறருக்கும் அடி வாங்கித் தருவான்.
Principle Officeற்கு முன்னால் இருந்த தகரக் கொட்டகையில் (tin shed) நடுவில் இருந்த வகுப்பறை தான் எங்களது Grade 5A வகுப்பறை. சிவக்குமரனோடு நாங்கள் கடைசியாகப் படித்த AL Commerce வகுப்பான Lower VI படித்ததும் அதே தகரக் கொட்டகை வகுப்பறையில் தான்.
Middle schoolல் சிவக்குமரனின் சேட்டைகளை பார்த்து விட்டு, டோனி கணேஷன் மாஸ்டர் வைத்த பட்டப்பெயர் நைனா மரிக்கார், அது மருவி கடைசியில் நைனா மட்டும் அவனோடு ஒட்டிக் கொண்டது.
1990 ஜூனில், இரண்டாம் ஈழப்போர் தொடங்கி பாடசாலைகள் மூடப்படுவதற்கு சில நாட்களிற்கு முன்னரும், சிவக்குமரன் தனபாலன் மாஸ்டரின் அறைக்கு சென்று வந்திருந்தான்.
அப்பத் தான் இங்கிலாந்தில் கல்வி கற்று விட்டுத் திரும்பி இருந்த தனபாலன் மாஸ்டர், சிவக்குமரனை இங்கிலீஷில் ஏசோ ஏசு என்று ஏசி எச்சரித்து அனுப்பியிருந்தார்.
எங்களுக்கு economics படிப்பித்த சுப்ரமணியம் மாஸ்டர் பார்வை வலுவற்றவர். அவரது வகுப்பு நடக்கும் போது, சிவக்குமரனும் யோகதாஸும் சப்பாத்தைக் கழற்றி வைத்து விட்டு, நைஸாக நழுவி வகுப்பை விட்டு வெளியேறி, ஒரு சுத்து சுத்தி விட்டு வருவார்கள்.
சண்டை தொடங்கி, சிவக்குமரன் இயக்கத்திற்குப் போய் சேரலாதன் ஆக அவதாரம் எடுக்க, நாங்கள் இயக்கம் open pass விட்ட நாட்களில் கொம்படி தாண்டி கொழுப்புக்கு தப்பியோடினோம்.
இயக்கத்திலும் அவன் குழப்படி விட்டுக் கொண்டு தானிருந்தானாம். சேரலாதனிற்கு கனதரம் காத்து கழற்றப்பட்டிருக்காம். ஒரு முறை அவர் ட்ரை பண்ணின இயக்கப் பெட்டைக்கு ஃபிலிம் காட்ட, பக்கத்து வீட்டு வளவுக்குள் மேய்ந்து கொண்டிருந்த கோழியை சுட்டு விழுத்தியதால் காத்து கழற்றப்பட்டாராம்.
தென்னிந்திய சினிமாப் பிரபலங்களை, கிளிநொச்சிக்கு அழைத்து வந்ததில் சேராக்கு பெரும் பங்குண்டு. பாரதிராஜாவில் தொடங்கி மகேந்திரன் தொடக்கம் சீமான் வரை தங்களது பயணக்கதைகளில் சேராவைக் குறிப்பிட்டே கதைப்பார்கள்.
இயக்குனர் சீமானிற்கு மண்டையைக் கழுவி அவரை எங்களது போராட்டத்தின் தீவிர ஆதரவாளனாக மாற்றியதே சேரலாதன் தான் என்ற ஒரு கதையும் இருக்குது.
தமிழர் போராட்டத்தின் தலைவிதியையே புரட்டிப் போட்ட ஆனந்தபுரச் சண்டைக்கு சென்ற சேரலாதன், களத்திலிருந்து வீடு திரும்பாத வேங்கைகளில் ஒருவனாகி விட்டான்.
“இளமை நாளின்
கனவை எல்லாம்
எருவாய் மண்ணில்
புதைத்தவர்கள்
போர்களம் படைத்து
தமிழ் இனத்தின்
கருத்தில் நெருப்பை
விதைத்தவர்கள்
எங்கள் தோழர்களின்
புதைகுழியில்
மண் போட்டுச்
செல்கின்றோம்”
சில வருடங்களிற்கு முன்னர் சிவக்குமரன் பற்றி எழுதிய பதிவு
எழுதியவர் – ஜூட் பிரகாஷ்