2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
மருத்துவர் சங்கம் மட்டுமல்லாது தாதியர் சங்கம், வைத்தியசாலை மேம்பாட்டு பேரவை, ஊழியர் சங்கம் என ஊழியர்களுக்கான பல்வேறு அமைப்புகள் இயங்கி வந்ததுடன் அவற்றினுடைய செயற்பாடுகளுக்கு தூண்டுதல் அளிக்கப்பட்டது.
வைத்தியசாலை முழு வீச்சுடன் இயங்கியவேளை சேவைபுரியும் அனைவருக்கும் கடமைக்கு அப்பால் பங்களிப்பு கடின உழைப்பு அத்தியாவசியமாக உள்ளது. தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகளும் அவர்களோடு சேர்ந்து வருபவர்களும் சேவையின் முடிவில் திருப்தியடைய வேண்டும். வைத்தியசாலை என்பது எப்போதும் ஒரு சிக்கலான சூழல். அங்கு கடமை புரிபவர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். ஏதோவொரு குறைபாட்டிற்கு தீர்வை நாடி வருபவர்களை இன்முகம் காட்டி அவர்கள் சொல்லும் குறைபாடுகளை நன்கு கேட்டுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு நிலைக்கு ஊழியர்களின் சேவைகளோடு இணைந்த பல நற்பண்புகளை காலத்திற்குக் காலம் கட்டி எழுப்புதல் வேண்டும்.
அன்றைய சூழலில் பல ஊழியர் சார்ந்த சங்கங்கள் இயங்க ஊக்குவிக்கப்பட்டன. வைத்தியர்கள் சங்கம் சிறப்பாக இயங்கியதுடன் அவர்கள் ஒரு நூலகத்தையும் நல்ல முறையில் நடாத்தி வந்தார்கள். அவ்வாறே தாதியர் சங்கமும் இயங்கி வந்தது. அவர்கள் வருடாந்த தாதியர் தினத்தை வைகாசி 12 கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் அனைத்து தாதிய உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
வைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவை போர் சூழலிலும் வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளில் கணிசமான பங்களிப்பை செலுத்தியது.
வைத்தியசாலை ஊழியர் சங்கத்தில் பலர் உறுப்பினர்களாக இருந்ததுடன் சங்கத்தில் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து ஊழியர்களுக்கு கடனுதவித் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு குறைந்தபட்சம் 100 தாதியர்களாவது தேவைப்பட்டனர். அனால் அப்போது 24 பேர் மாத்திரம் கடமையில் இருந்தனர். ஒரு நாளுக்கு இரு நேர கடமைகளை செய்து வந்தார்கள். அக் காலப்பகுதியில் தமிழ் ஈழ சுகாதார சேவையின் கீழ் அறிவியல் நகர் பகுதியில் மருத்துவ விஞ்ஞானக் கழகம் (Institute of Health Science – HIS) எனும் நிறுவனம் இயங்கி வந்தது. சமாதான காலப்பகுதியில் வடகிழக்கின் பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 25 தாதிய உதவியாளர்களும் 25 மருத்துவ உதவியாளர்களும் பயிற்றுவிக்கப்பட்டுக்கொண்டு இருந்தனர். 2008 போர் சூழலில் அவர்கள் அனைவரும் பொது வைத்தியசாலை பணியாளர்களோடு சேவையில் இணைந்து கொண்டனர். அப்போது அவர்கள் சுமார் இரண்டு வருடகால பயிற்சியை முடித்திருந்தனர். வைத்தியசாலை தாதியர்களுக்கு அனுசரணையாக அவர்களுக்கு பல கடமைகளையும் செய்துவரும் ஆற்றலைக் கொண்டிருந்தனர். இவர்களில் அநேகமானவர்கள் பொது வைத்தியசாலை இடம்பெயர்ந்த எல்லா இடங்களிலும் கடமையாற்றியதுடன் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக மாத்தளன் பாடசாலை வைத்தியசாலையில் கடமையாற்றி 2009 சித்திரை 20ல் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வந்தடைந்தனர்.
வைத்தியசாலையில் மாடிக் கட்டடத்தின் ஓர் விசாலமான அறை பயிற்சி வழங்கும் இடமாக மாற்றியமைக்கப்பட்டு ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதில் ஓர் அங்கமாக வைத்தியசாலை ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. மதிப்பிற்குரிய கலியுகவரதன் ஐயா அவர்கள் சிவனருள் மானுடக் கழகம் எனும் அமைப்பின் ஊடாக இப் பயிற்சியை நடாத்தி வந்தார். பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த ஊழியர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு பெரும் ஆறுதலைத் தந்தது. வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட பலர் இப் பயிற்சி வகுப்பில் பங்குபற்றினர்.
தொடரும்………..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/