நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது சீன மாகாணங்கள்.
சீன அரசு பல தசாப்தங்களாக பின்பற்றிவந்த மக்கள் தொகை கட்டுபாட்டு விதிமுறைகளை கடந்த சில ஆண்டுகளாகவே தளர்த்தி வருகிறது.
ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் வரை பெற்றுகொள்ளலாம் என்பது முதல் சமீபத்தில் திருமணமாகாதவர்களும் குழந்தை பெறலாம் என்பது வரை பல மாற்றங்கள் வந்துள்ளன.
சீன விந்தணு வங்கிகள் கல்லூரி மாணவர்கள், தகுதியுள்ளவர்கள் விந்தணுக்களை தானமளிக்கலாம் என அறிவிப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வனைத்துமே நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.
நாட்டின் மக்கள் தொகை கணிசமாக குறைந்ததாலும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் சீனா இந்த மாற்றங்களை கொண்டுவருகிறது.
இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக, புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அந்நாட்டு மாகாணங்கள் சில அறிவித்துள்ளன.
இதற்கு முன்னர் மூன்று நாட்கள் குறைந்தபட்ச ஊதியத்துடன் விடுமுறை என்று இருந்த திட்டத்தில் இருந்து விலகி இந்த புதிய திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இச்செய்தி கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பிள்ஸ் டெய்லி ஹெல்த் பத்திரிகை அறிக்கையில் வெளியானதாக ரொய்ட்டர்ஸ் செய்தி தளம் மேற்கோள் காட்டியுள்ளது
சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் சாஞ்சி ஆகிய மாகாணங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.