உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களை கருத்தில்கொண்டு, நெதர்லாந்து அரசாங்கம் தனது தங்க இருப்பின் ஒரு பகுதியை இலண்டனுக்கு இடமாற்றம் செய்துள்ளது.
நெதர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்கா மற்றும் கனடாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 86 டன் தங்கம் இலண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நியூயார்க் மற்றும் ஒட்டாவாவில் உள்ள தங்க இருப்புகளுடன் ஒப்பிடுகையில், இலண்டனில் சேமித்து வைக்கப்படும் தங்கத்தை சர்வதேச சந்தையில் விரைவாகவும் எளிதாகவும் வர்த்தகம் செய்ய முடியும் என நெதர்லாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தேவை ஏற்படும் பட்சத்தில் தங்க இருப்புகளை மிக விரைவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நெதர்லாந்து மத்திய வங்கியின் தலைவர் ஓலாஃப் ஸ்லைஜ்பென் (Olaf Sleijpen), இந்த நடவடிக்கை நாட்டின் தங்க இருப்புகளை பயன்படுத்துவதற்கான திறனை மேலும் மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தங்க இருப்புகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், நாட்டின் மீள்திறன் மற்றும் அவசரகாலத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவை” என அவர் தெரிவித்துள்ளார்.