Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மனிதக் கடத்தல் கும்பல் தலைவன் வசமாக மாட்டினார்!

மனிதக் கடத்தல் கும்பல் தலைவன் வசமாக மாட்டினார்!

1 minutes read

ஐரோப்பிய புலம்பெயர்வு நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான மக்களைக் கடத்தியதில் குற்றவாளியாக அறியப்பட்ட மனித கடத்தல்காரரான ஜகாரியாஸ் ஹேப்டேமரியம் எனும் எரித்திரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகமும் சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், கடந்த ஜனவரி முதலாம் திகதி சூடானில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இன்டர்போல் கண்காணித்து வந்தது எனக் கூறப்படுகின்றது.

ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கிழக்கு ஆப்பிரிக்க குடியேறிகளைக் கடத்தி, தவறாக நடத்தி, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் அமைப்பை இந்நபர் நடத்தி வந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் கைது செய்யப்பட்ட ஹேப்டேமரியம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனிதக் கடத்தலில் ஈடுபட்டதற்காக எதியோப்பிய நீதிமன்றம் இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

லிபியாவில் உள்ள கிடங்குகளில் அகதிகள் மற்றும் குடியேறிகளை சிறை வைத்து அவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் ஆயிரக்கணக்கான டொலர்களைப் பறித்ததாக ஹேப்டேமரியம் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

“உலகின் மிக மோசமான மற்றும் கொடூரமான மனித கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர்,” எனக் கூறும் நெதர்லாந்து ‘அந்நபரை தேடப்படுபவர்களின் பட்டியலில்’ வைத்திருக்கின்றது.

நெதர்லாந்து அதிகாரிகளின் தரவுப்படி, ஹேப்டேமரியம் லிபியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமை நடத்தி வந்திருக்கின்றார். அம்முகாமில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக வைத்து, அடித்து, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படுகின்றது.

ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற மக்களின் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அம்மக்களை மனிதக் கடத்தல்காரரான ஹேப்டேமரியம் சுரண்டினார் எனச் சொல்லப்படுகின்றது.

இந்த நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் சூடான், எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியாவிலிருந்து குடியேறிகளை லிபியாவுக்கு அழைத்துச் சென்ற வழி முடக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியான சையத் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய கரைகளில் தஞ்சமடைவதற்கு முக்கிய இணைப்பு நாடாக லிபியா உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More