குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை, சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
குடியரசு தினவிழா எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலையிலுள்ள காந்திசிலைக்கு அருகில் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.
இதனை முன்னிட்டு ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலை அருகே முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும் அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடந்தது.
அதைத் தொடர்ந்து, முப்படையினர் அணிவகுப்பு நடத்தினர். தேசிய மாணவர் படை, மத்திய தொழிலகப் படை, ஆர்.பி.எப்., தமிழக பொலிஸ்துறை, தீயணைப்பு படை ஆகியோர் அடுத்தடுத்து அணிவகுத்தனர்.
இந்நிலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவப்படை ஆகிய முப்படைகளின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழக பொலிஸாரும் அணிவகுப்பு நடத்தினர். மேலும் பல்வேறு துறையினரின் அலங்கார வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன.