யாழில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில் சுயநினைவற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த இளைஞர் இதயம் வெடித்து உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையிலிருந்து நேற்று தெரியவந்துள்ளது.
சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கு அமைய யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை நிபுணர் ஜே.மதராஜ் மேற்கொண்ட பரிசோதனையில் அடிப்படையில் குறித்த விடயம் உறுதியாகியுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது 24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து உடனடியாக கொலையாளிகளை கைது செய்யுமாறும் தெரிவித்து ஏற்கனவே உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.