வெளிநாடுகளில் இருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாய ராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ, விவசாய பணிப்பாளர் நாயகம், தேசிய பசளைகள் செயலகத்தின் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசாங்கம், சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 96000 மெட்ரிக் தொன் சேதனப் பசளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள சேதனப் பசளைகளில், பாதிப்புக்களை ஏற்படுத்தும் பற்றீரியாக்கள், மற்றும் பூச்சிகள் அடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை பயன்படுத்துவதன் ஊடாக இலங்கையின் சூழலும் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இந்த தரமற்ற சேதனப் பசளையை இறக்குமதி செய்வதும் அதனை பயன்படுத்துவதும் தாவர பாதுகாப்பு சட்டம், வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த பசளையை விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தினால், அது விவசாய நடவடிக்கைகளில் மோசமான விளைவுகளை கொண்டுவந்து சேர்க்கும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து சேதனப் பசளைகளை இறக்குமதி செய்வதை தடுத்து எழுத்தாணை ஒன்று பிறப்பிக்குமாரறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, வெளிநாட்டிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதிச் செய்ய எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை செயற்படுத்துவதை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் தரமில்லா சேதனப் பசளையை இறக்குமதி செய்ய அனுமதியளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது