கம்பஹா மாவட்டத்தின் ஜா எல, கந்தானை, ஏக்கல உள்ளிட்ட பகுதிகளை அண்மித்து முச்சக்கர வண்டிகளை திருடி, அவற்றை விற்பனை செய்து வந்த கும்பலொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
6 சந்தேக நபர்களைக் கொண்ட இந்தக் கும்பல் திருடியதாக கருதப்படும் 20 முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட வகையில் இந்த நடவடிக்கையை குறித்த குழு முன்னெடுத்துச் சென்ற நிலையிலேயே ஜா – எல பொலிசாரின் சூட்சுமமான விசாரணைகளில், அக்குழுவைக் கைதுசெய்ய முடிந்ததாக ஜா எல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்களில் சென்று, முச்சக்கர வண்டி திருட்டில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ள நிலையில் , அதற்காக பயன்படுத்தப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு விசாரணைகளில், குறித்த கும்பலைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள், ஜா எல, கற்பிட்டி, ராகம மற்றும் போபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 38 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் திருடிய 20 முச்சக்கர வண்டிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
அதில் 11 முச்சக்கர வண்டிகள், பிரதான சந்தேக நபருக்கு சொந்தமான ராகம வாகன தரிப்பு நிலையம் ஒன்றிலிருந்தும், 4 முச்சக்கர வண்டிகள் கற்பிட்டி மற்றும் ராகமை பகுதி வாகன திருத்தும் நிலையங்கள் இரண்டிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 5 முச்சக்கர வண்டிகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ராகம, பமுனுகம, கற்பிட்டி பகுதிகளில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் கைதுசெய்யப்பட்டோரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.