நல்லூர் அறங்காவலர் நிர்வாக அழகின் மேன்மைகள் பாட நூல்களின் வழி எதிர்கால சந்ததியினருக்கு தரப்படவேண்டும் என நல்லூர் சைவத் தமிழ்ப்பண்பாட்டுக் கலை கூடலின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் மெய் நிகர் நினைவஞ்சலி பிரார்த்தனை உரையில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அழகுக்கும் ஆன்மீகத்துக்குமிடையிலான் இரண்டறக்கலந்த உறவுபற்றிய தெளிந்த பக்குவத்துடன் நல்லூரின் பேரழகுக்கும் ஆன்மீக நிமிர்வுக்கும் நல்லூர் அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஆற்றிய பணிகள் ஈடிலாதன,தமிழரின் தொன்மையான வேல்வழிபாட்டினை இன்றுவரை அழகாய் பேணியதுடன் ஆக்கத்திறன்மிக்க பிரமிக்கத்தக்க ஆலயசூழலை எமதாக்கியவர்.
இத்தனைக்கும் தன்னைத்துருத்தாத அவரின் எளிமை ஏனைய எங்கள் ஆலயங்களுக்கு பாடமாகவேண்டும் . பாட நூல்களின் வழி எதிர்கால சந்ததியினருக்கும் இது தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டும்அவரது எளிமையும் அடக்கமும் அவரது ஆன்ம வீரத்தின் அடையாளம்; அர்ப்பணிப்பான பணியின் வழியாக வாய்த்த அறிவுத்துணிவு என்றால் மிகையில்லை .
தந்தை வழியில் அவரோடு பக்குவமாய் இசைந்து வளர்ந்த புதிய அறங்காவலர் மைந்தன் ஷயன் குமாரதாஸ் அவர்களுடன் தோன்றாத் துணையாக குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஆத்மபலம் நின்று வழிகாட்டும் …” என்றார்.
நல்லூர் சைவத் தமிழ்ப்பண்பாட்டுக் கலை கூடலின் ஏற்பாட்டில் இணைத்தலைவர் கல்விஅமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இன்று மாலை இடம் பெற்ற மெய் நிகர் ஒன்று கூடலில் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன், சைவத்தமிழ்ப் பண்பாட்டுக் கலைகூடலின் இணைத்தலைவர் முனைவர் கமலநாதன் ஆகியோர் உரையாற்றினர். கலைக்கூடலில் செயலர் கவிஞர் ஜெயசீலனின் கவிப்பாமாலையும் இடம்பெற்றது. கலைக்கூடலின் இணைசெயலரும் யாழ்ப்பாணபிரதேச செயலருமான சுதர்சன் நன்றியுரை வழங்கினார்.
காலை பத்துமணியளவில் நல்லூரான் செம்மணி வளைவை அண்டியபகுதிகளில் னமறந்த அறங்காவலர் நினைவாக 92 பனம் விதைகள் கலைக்கூடல் ஏற்பாட்டில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.