கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின.
இன்றைய தினம் பாடசாலை ஆரம்பித்த போதிலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளை முடித்ததன் பின்னர் இன்றையதினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
கொழும்பு
சுபோதினி குழு அறிக்கைக்கு அமைய சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மலையகம்
நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகாமையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், 24வருட காலமாக நிலவிவரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுதருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, இலங்கையின் ஆசிரியர் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் பாதுகாக்க இந்த நாட்டின் அதிகாரிகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் எனவும்
1997மற்றும் 2006ஆகிய வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திட்டத்தை அமுல்படுத்தப்படாமையை கண்டித்தும் அதிபர், ஆசிரியர் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமை, கொவிட் 19 குறித்து முழுமையான வசதிகள் பாடசாலைகளுக்கு செய்துக்கொடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்று மீண்டும் காந்தி பூங்கா முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கையான சம்பள முரண்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும் கல்வியில் இராணுவ மயமாக்கலை நிறுத்தக் கோரியும் பாராளுமன்றத்தில் சம்பளம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று தங்களது கல்வி நடவடிக்கை சென்று சரியாக இரண்டு மணி அளவில் கல்வி நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல சங்கங்கள் ஒன்றிணைந்து தங்களது உரிமை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் – ஜோசப் ஸ்டாலின்
அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை புதிய முறைமையில் இனி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சகல மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் மாத்திரமே பாடசாலை சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரமே கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவர். அதனை தவிர்த்து வேறு எந்த கல்வி சார் செயற்பாடுகளிலும் ஈடுபடப் போவதில்லை.
வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள ஆசிரியர்களுக்கு பாடசாலை செல்வதற்கான சூழல் இல்லை. காரணம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாமையாகும்.
எனவே அரசாங்கம் மாகாணங்களுக்கிடையில் பாடசாலை செல்லும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை புதிய முறைமையில் இனி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
சகல மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.