“போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றில் இனிவரும் நாட்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.”
– இவ்வாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனை இல்லாது ஒழிப்பதற்குப் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இனிவரும் நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது தனியே பொலிஸாரின் கடமை மாத்திரம் அல்ல. பொலிஸாரால் மாத்திரம் அவற்றை இல்லாது ஒழிக்க முடியாது. மக்களின் பூரண ஆதரவு பொலிஸாருக்குக் கிடைக்க வேண்டும்.
குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மிக அவதானத்துடன் விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் சமூக அந்தஸ்துடன் வாழ வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 61 பொலிஸ் நிலையங்களிலும் தினமும் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் பொலிஸார் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவில்லை. வீதிப் போக்குவரத்து விதி மீறல்களைக் கண்காணித்தல், சட்டம் – ஒழுங்கை நிலை நாட்டுதல் எனப் பல்வேறு செயற்றிட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்” – என்றார்.