தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று மாலை தொடக்கம் இன்று நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம், தபால் காரியாலயங்கள் மற்றும் நிர்வாக காரியாலயங்களில் எந்தவிதமான கண்காணிப்புமின்றி மேலதிக கொடுப்பனவுக் குறைப்பு , தபால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் இடமாற்ற சபையின் மேல்முறையிட்டு சபையில் நடவடிக்கையிலிருந்து தொழிற்சங்கத்தை நீக்கியமை, தபால் கட்டணம் மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி தபால் திணைக்களத்தின் வியாபார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை போன்ற பல விடயங்களுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாமைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடிதங்கள், பொதிகள் அனுப்ப வந்த மக்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவு பெறுவதற்கு வருகை தந்த முதியவர்கள் எனப் பலரும் ஏமாற்றங்களுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.