புதிய வருடத்தின் நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 5ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று நாடாமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதி புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலம் மற்றும் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது என்று செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இதன் பின்னர் பிற்பகல் 5 மணி முதல் 5.30 மணி வரை அரசால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.